திண்டிவனம் அருகே புதன்கிழமை அதிகாலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பெண்கள் உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சங்கால்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் உறவினரான பால்பாண்டியன் குடும்பத்தினர் 7 பேருடன் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை இரவு சொகுசு காரில் காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வந்தார். காரை அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் பாரதிராஜா (26) ஓட்டி வந்தார்.
அதே போல, சேலம் மாவட்டம், கொங்கனாம்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஜானகிராமன்(70) உள்ளிட்ட 5 பேர் அத்திவரதரை தரிசித்து விட்டு காரில் திண்டிவனத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். இந்த இரு கார்களும் புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-செஞ்சி நெடுஞ்சாலையில் உள்ள
தீவனூர் சந்திப்பு அருகே வந்தபோது, நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், இரு கார்களின் முன்பகுதியும் நொறுங்கி உருக்குலைந்தன. இந்த விபத்தில், சங்கால்பட்டியைச் சேர்ந்த கண்ணதாசன் மனைவி ஈஸ்வரி (45), கோட்டைச்சாமி மனைவி பாக்கிய லட்சுமி(43), பால்பாண்டியன் மனைவி மகாலட்சுமி(29), ஓட்டுநர் பாரதிராஜா(26), காரில் வந்த ஜெயக்குமார் மகன் ராம்மோகன் (10), பால்பாண்டியன் மகள் ரேஷ்மாஸ்ரீ(2), நிரஞ்சனா(23), இளையபாரதி மகன் சகாயவர்மன்(4) ஆகிய 8 பேர் பலத்த காயமடைந்தனர். மற்றொரு காரில் வந்த ஜானகிராமன், ஓட்டுநர் சண்முகம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அப்பகுதியினர் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரோசணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர்களின் தூக்கக் கலக்கம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.