தியாகதுருகம் ஒன்றியம், சு.ஒகையூர் ஊராட்சிக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரத்தில், கூடுதல் பொது விநியோகக் கடை கட்டடம் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாகியும் பூட்டியே கிடக்கிறது. இந்தக் கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சுப்பிரமணியபுரம் கிராமத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப் பகுதி மக்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப் பொருள்களை வாங்குவதற்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள நியாயவிலைக்கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், இந்த கிராமத்திலேயே 2010-2011-ஆம் ஆண்டு தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பொது விநியோகக் கடை கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 8 ஆண்டு காலமாகியும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் அரசின் பணம் விரயமாவதுடன், கிராம மக்களின் அவதியும் தொடர்கிறது. எனவே, இந்த பொது விநியோகக் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.