தியாகதுருகம் அருகே செவ்வாய்க்கிழமை பட்டப் பகலில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகத்தை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் சுப்பிரமணி. தச்சுத் தொழிலாளி. இவர், செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, சின்னசேலம் அருகே வீரபயங்கரம் கிராமத்தில் உள்ள, குலதெய்வமான அய்யனார் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
மாலையில் அவர்கள் திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.