விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் புதன்கிழமை இரவு மினி லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார். இதைக் கண்டித்து, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகேயுள்ள பொய்கை அரசூரைச் சேர்ந்த சின்னத் தம்பி மகன் சுப்பிரமணி(55), கூலித் தொழிலாளி. இவர், புதன்கிழமை இரவு அரசூர் கூட்டுச்சாலையில் இருந்து, சாலையைக் கடந்து பொய்கை அரசூர் செல்ல முயன்றார். அப்போது, விழுப்புரத்திலிருந்து, உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த மினி லாரி மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், சென்னை-
திருச்சி தேசிய நெடுஞ்சாலை மீது அரசூர் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசூர் கூட்டுச் சாலையில் தொடர்ந்து வரும் விபத்துகளைத் தடுக்க வேண்டும், இங்கு அவசர ஊர்தியை நிறுத்தி வைக்க வேண்டும், தொடரும் விபத்தால், அதிகரித்து வரும் உயிரிழப்புகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும், போக்குவரத்து போலீஸாரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, பொது மக்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். மறியலால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.