அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்தக் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி தாலுகா மக்கள் கோரிக்கை மாநாடு, பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தாலுகா செயலர் பி.மணி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு பி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு அ.பா.பெரியசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்குடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய வைத்துள்ளது.
இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். காஷ்மீர் பிரச்னையை திசை திருப்பவே சிதம்பரத்தை கைது செய்துள்ளனர்.
நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத் துறையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை மத்திய பாஜக அரசு திசை திருப்புகிறது என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்டக்குழு அ.நடேசன், வட்டக்குழு ஆர்.செல்வராசு, ஜி.அருள்தாஸ், வி.சாவா, என்.தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கே.ஜக்கிரியா நன்றி கூறினார்.