மயிலம் அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தார்.
மயிலம் அருகே சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகள் ஜான்சிராணி(24). மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள துணிக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல வேலைக்குச் செல்ல, வீட்டிலிருந்து புறப்பட்டு கூட்டேரிப்பட்டுக்கு நடந்து சென்றார். வழியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூர் விரைவு ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தால் ரயில் 10 நிமிடம் நின்று, புறப்பட்டுச் சென்றது.
செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு, உடல் கூறு ஆய்வுக்காக, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜான்சிராணிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவர் உயிரிழந்தது, உறவினர்களை சோகத்தில்
ஆழ்த்தியுள்ளது.