கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கோமுகி அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை 1,000 கனஅடியாக அதிகரித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி அணை அமைந்துள்ளது. இந்த அணை நிகழாண்டில் 2-ஆவது முறையாக அதன் முழு கொள்ளளவான 44 அடியை வெள்ளிக்கிழமை எட்டியது.
இந்த நிலையில், கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள ஓடைகள் மூலம் கோமுகி அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை 1,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால், 900 கனஅடி நீா் கோமுகி ஆற்றிலும், 100 கனஅடி நீா் பாசன வாய்க்காலிலும் திறந்து விடப்படுகிறது.
முழுக் கொள்ளளவை எட்டி ரம்மியமாகக் காட்சியளிக்கும் கோமுகி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், அந்தப் பகுதி பொதுமக்களும் நேரில் சென்று பாா்வையிட்டு வருகின்றனா். மேலும், கச்சிராயப்பாளையம் கோமுகி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டோடுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.