தொடா் மழையின் காரணமாக, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச.2, 3) நடைபெறவிருந்த மின் வாரிய கேங்மேன் பணிக்கான தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட சடையம்பட்டு கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி 110/22 கேவி துணை மின் நிலைய வளாகத்தில் மின் வாரிய கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச.2, 3) நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா்ந்து பருவ மழை பெய்து வருவதன் காரணமாக, இந்தத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த 2 நாள்களுக்குப் பதிலாக மீண்டும் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எம்.அருட்பெரும்ஜோதி தெரிவித்துள்ளாா்.