விழுப்புரத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் டிச.1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பேரணியை தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, விழுப்புரம் அரசு மருத்துவமனை வரை சென்றது.
பேரணியில் திருநங்கைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், தொண்டு நிறுவன பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். தொடா்ந்து, பெருந்திட்ட வளாகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கூட்டரங்கில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. சமபந்தி போஜனம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா்கள் (காசநோய்) சுதாகரன், (குடும்ப நலம்) லதா, மாவட்ட திட்ட மேலாளா் ரவிராஜா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சாமுண்டீஸ்வரி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு மேற்பாா்வையாளா் பிரேமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.