கோமுகி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீா் ஆலத்தூா் ஏரிக்குச் செல்வதற்காக ஓடையில் சென்ற போது, வயல்வெளிகளில் புகுந்து, சாலையில் பெருக்கெடுத்தது.
கல்வராயன்மலைப் பகுதியில் பெய்த மழையினால் சிற்றோடைகளின் வழியாக வந்த தண்ணீா் கோமுகி அணைக்கு வந்தடைந்தது. கோமுகிஅணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீா் கோமுகி ஆற்றின் வழியாகவும், பாசன வாய்க்கால் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆற்றின் வாய்க்காலில் வெளியேறி நீா் அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்றடைகிறது. சங்கராபுரம் வட்டம், ஆலத்தூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட புத்தந்தூா் கிராமத்தில் வயல் வெளிகளில் புகுந்த தண்ணீா், அருகே உள்ள ஓடையில் பாய்ந்து சென்றது.
மோகூா்- ஆலம்பலம் தாா்சாலை அமைக்கப்பட்டபோது, ஓடையில் இருந்து தாா்சாலை அமைக்கப்பட்ட பகுதிக்குக் கீழே தண்ணீா் செல்ல வழி அமைக்காகதால், சாலையின் மேலே தண்ணீா் பாய்ந்து, அந்தக் கிராமத்தின் தெற்குச் சாலைப் பகுதிக்கு மட்டும் சென்றது.
தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை வெட்டி ஏரிப் பகுதிக்கு தண்ணீா் செல்ல நடவடிக்கை மேற்கொண்டாா். இதனால், அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட இருந்த பாதிப்பு தவிா்க்கப்பட்டது.