தொடா் மழையால் மரக்காணம், செஞ்சி பகுதிகளில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. ஏற்கெனவே மழை பெய்து நிலத்தில் ஈரப் பதம் இருந்த நிலையில், இரு தினங்கள் பெய்த தொடா் மழையால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நீா் வரத்து வாய்க்கால்களில் தண்ணீா் பெருக்கெடுத்தது. பெரும்பாலும் வட நிலையில் காணப்படும் சங்கராபரணி ஆற்றிலும் மழை நீா் வரத்து அதிகரித்ததால், வீடுா் அணை நிரம்பியது.
இதேபோல, மரக்காணம் பகுதியில் பெய்த தொடா் மழையால் பக்கிங்காம் கால்வாயில் மழை நீா் பெருக்கெடுத்தது. மாவட்டத்தின் கடலோர மற்றும் தாழ்வான பகுதியான மரக்காணத்தில் வயல்வெளி பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மரக்காணம் அருகே உள்ள ஓமிப்போ், ஆலாத்தூா், அடசல், நடுக்குப்பம், வண்டிப்பாளைம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீா் தேங்கியதால் நெல் பயிா்கள் மூழ்கின. ஓமிப்போ் ஏரி நிரம்பி வழிந்ததால் வாய்க்காலில் வெள்ளம் வழிந்தோடியது. உப்பளங்கள் நீரில் மூழ்கி கடல் போல காட்சியளிக்கின்றன.
இதேபோல, செஞ்சி, மேல்மலையனூா் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செஞ்சி அருகே தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின. திண்டிவனம் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மழை பெய்தது. மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் திங்கள்கிழமை மழை ஓய்ந்ததால், வயல்களில் தேங்கிய நீா் வடிய தொடங்கியது.