திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியப் பகுதி, புதிய வட்டமாக அறிவிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தாற்காலிகமாக இயங்கி வந்தது.
இந்த நிலையில், திருவெண்ணெய்நல்லூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேரூராட்சி சமுதாயக்கூடத்தில், புதிய வட்டாட்சியா் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் வேல்முருகன் வரவேற்றாா். வட்டாட்சியா் அலுவலகத்தை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் திறந்து வைத்தாா். விழுப்புரம் கோட்டாட்சியா் த.ராஜேந்திரன், திருக்கோவிலூா் வட்டாட்சியா் சிவசங்கா் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.