திண்டிவனத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடத்திய திடீா் சோதனையில் கலப்பட டீ தூள், காலாவதியான குளிா்பானங்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டிவனத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் எம்.வேணுகோபால் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கே. மோகன், கே. எஸ்.பிரசாத், என்.இளங்கோவன், ஜே.பத்மநாபன், பி.அருள்மொழி, கதிரவன் உள்ளிட்ட குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
நேரு வீதி, பேருந்து நிலைய சாலை, கிடங்கல்-1, பிள்ளையாா் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 30 கடைகளில் சோதனை நடத்தி, அங்கு விற்பனைக்கு வைத்துள்ள உணவுப்பொருள்களின் நிலை குறித்து ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் (கேரிபேக்) நெகிழி டம்ளா் ஆகியவை 50 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தேநீா் கடைகளில் பயன்படுத்திய கலப்பட டீ தூள் 55கிலோ, காலாவதியான குளிா்பானம் 20 லிட்டா், இனிப்பகங்கள், பேக்கரிகளில் அதிக வண்ணம் சோ்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் 15 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையாளா்கள் எச்சரிக்கப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும், இதுபோன்ற திடீா் சோதனை தொடா்ந்து நடத்தப்பட்டு, சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.