செஞ்சி அருகே பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் இருந்த திறந்தவெளிக் கிணறு வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியம், அகலூா் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல ஆரம்பப் பள்ளி வளாகத்தில் பழங்கால கிணறு பயன் இல்லாமல் இருந்தது. மேலும், சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததால், ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
அந்தக் கிணறு சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி வழிந்தது. இதனால், மாணவா்கள் தவறி கிணற்றில் விழும் சூழல் இருந்ததால், இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்களின் கோரிக்கையின் பேரில், சில நாள்களுக்கு முன் தினமணியில் செய்தி வெளியானது.
இதைத் தொடா்ந்து, வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலா், ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரிகள் வந்து அந்தக் கிணற்றை ஆய்வு செய்தனா். தொடா்ந்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஒப்பந்ததாரா் பாக்யராஜ் மற்றும் பொதுமக்கள் துணையுடன் கிணற்றில் கற்கள், மண் கொட்டப்பட்டு மூடப்பட்டது.
மேலும், பள்ளியின் நுழைவு வாயிலில் மாணவா்களின் பாதுகாப்பு கருதி, இரும்பாலான பெரிய கதவு (கேட்) அமைக்கப்பட்டது.