விழுப்புரம் அருகே கூட்டுறவு வங்கியில் திருடு போன விவசாயிகளின் தங்க நகைகளுக்குப் பதிலாக அதற்குரிய பணத்தை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் அருகேயுள்ள திருநாவலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (கடன் சங்கம்) இயங்கி வருகிறது. கடந்த 22.5.2010-இல், இந்த வங்கியில் இருந்த 497 விவசாயிகளின் 1,790 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. இது தொடர்பாக, வணிக குற்றப் புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த வங்கியின் ஊழியர் சிவக்குமார் உள்பட இருவரை கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், நகைத் திருட்டில் வங்கி ஊழியர்களே ஈடுபட்டது தெரிய வந்தது. ஆகையால், வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்பிக் கேட்டு, விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் 28 விவசாயிகள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நுகர்வோர் மன்றத் தலைவர் (நீதிபதி) தீனதயாளன், விவசாயிகள் அடகு வைத்த நகைகளுக்குப் பதிலாக, தற்போதைய சந்தை மதிப்பின்படி, கிராமுக்கு ரூ.3,163 வீதமும், மன உளைச்சல் ஏற்பட்டதற்காக கிராமுக்கு ரூ.1,000 வீதமும் கணக்கிட்டு 28 பேருக்கும் வழங்க வேண்டும். மேலும், வழக்குச் செலவுக்கு விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.