விழுப்புரத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து திமுக தலைமை இலக்கிய அணி சார்பில், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இலக்கிய அணித் தலைவர் முகவை தென்னவன் தலைமை வகித்தார். மாநில இலக்கிய அணி நிர்வாகிகள் வேழவேந்தன், செந்தில், கயல் தினகரன், வெங்கடாசலம், இறைவன், சேவுகப்பெருமாள், நேருபாண்டியன், போஸ், வெற்றிவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி பொருளாளர் சந்திரபாபு வரவேற்றார். துணைச் செயலாளர் நம்பிராசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவை, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார். இலக்கிய அணிச் செயலாளர் இந்திரகுமாரி கருத்தரங்கை தொடக்கிவைத்தார். தஞ்சை கூத்தரசன், தமிழச்சி தங்கபாண்டியன், விஜயா ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தொடர்ந்து, இலக்கிய அணி துணைத் தலைவர் கவிதைப்பித்தன் பட்டிமன்றத்தைத் தொடக்கி வைத்தார். கவிஞர் நந்தலாலா நடுவராக செயல்பட்டார். இதில், திறம்பட திமுகவை காத்து நின்றது தலைவர் ஸ்டாலினின் செயல்திறன் என்று பாஸ்கர், இந்திராவும், அனுபவ திறன் என்று தணிக்கொடி, அன்னலட்சுமியும் பேசினர். விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி நன்றி கூறினார்.