திருவெண்ணெய்நல்லூர் அருகே பைக் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், தி.புதுப்பாளையம் ஊராட்சி, பிள்ளையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பாயி (60). இவர், கடந்த 11-ஆம் தேதி தனது வீட்டின் எதிரே சாலையோரம் நின்றிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பைக், குப்பாயி மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குப்பாயி, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.