விழுப்புரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 150 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள சிங்கப்பூர் நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் வரலட்சுமி தலையிலான அதிகாரிகள், அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். குடியிருப்பு வளாகத்தின் முதல் தளத்தில் சம்சுதீன் மகன் அஷ்ரப் (48) என்பவரின் கிடங்கில் 150 கிலோ எடையிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.ஒரு லட்சம் இருக்கும். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களில் சிலவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதன் முடிவுகளைப் பொருத்து அஷ்ரப் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று நியமன அலுவலர் வரலட்சுமி தெரிவித்தார்.