விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி கணிதத் துறை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவிலான ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வரும், கணிதத் துறைத் தலைவருமான செல்வி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருணாகுமாரி கருத்தரங்க நோக்கவுரையாற்றினார்.
கல்லூரியின் துணைப் பதிவாளர் செளந்தராஜன் முன்னிலை உரையாற்றினார். கணிதத் துறையின் சிறப்பம்சங்கள் குறித்து பேராசிரியர் அகிலா விளக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி நூலகத் துறையைச் சேர்ந்த சி.கே.ராமையா, நூலகத்தின் தனித்துவம் மற்றும் ஆன்லைன் தரவு தளங்கள் குறித்தும், கணித ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கிப் பேசினார்.
மற்றொரு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ஸ்பெக்ட்ரம் தீர்வுகளின் இயக்குநர் ரோசன்குமார் சிங், பயிற்சி கையேட்டை வழங்கி, புதிய மென்பொருளை பயன்படுத்தி கணித சிக்கல்களை எப்படி தீர்க்க வேண்டும், கணினி சார்ந்த ஆராய்ச்சி, திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கினார்.
கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 505 மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.