விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதைகளிலும், பேருந்து நிற்கும் இடங்களிலும் கடைகளை வைத்தும், வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பாதைகளும், பேருந்துகள் நிற்கும் இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள கடைகள் நகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால், கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள், கடைகளை விஸ்தரிப்பு செய்து இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், இரு சக்கர வாகனங்களும் பேருந்துகள் நிற்கும் இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், பயணிகள் வந்து செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர்.
கடைகள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துள்ளதால் பேருந்து நிலையத்தின் அழகும் மங்கியுள்ளது.
காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் முன் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, பேருந்து நிலையத்துக்குள் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டி வருகின்றனர். இது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக மாவட்ட காவல் காண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.