கெடார் அருகே மாட்டுவண்டித் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே வீராமூர் ஏரியில் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை மண் எடுக்கச் சென்ற மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ், ராமலிங்கம் ஆகியோர் சென்றபோது, காட்டுப் பன்றி எனக் கருதி வண்டி மாடுகளை நோக்கி வேட்டை கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், கிருஷ்ணமூர்த்தியின் மாட்டின் தாடையில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து குற்றப்பிரிவு டி.எஸ்.பி. வீமராஜ், செஞ்சி டி.எஸ்.பி. வினோதினி தலைமையில் அமைக்கப்பட்ட 7 தனிப்படையினர், இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் திருநாவுக்கரசு உள்பட 7 பேரை கைது செய்தனர். அப்போது, திருநாவுக்கரசுவின் ரூ.8 லட்சம் மதிப்பிலான துப்பாக்கி, 96 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கெடார் அருகே சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த அருள்பாண்டியனின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை தலைமறைவாக இருந்து வரும்
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.