விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மலை மீது அமைந்துள்ள கோயில் சுனை நீரில் மூழ்கி கல்லூரி மாணவர், மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
விழுப்புரம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சுந்தர்ராஜ் (19). விழுப்புரம் அருகேயுள்ள அய்யங்கோவில் பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் சுவேதா (19). விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் மகள் ஜெனிபர் (19). இவர்கள் மூவரும் விழுப்புரத்தில் உள்ள கலைக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்ஸி. இரண்டாம் ஆண்டு பயின்று வந்தனர்.
நண்பர்களான இவர்கள் வெள்ளிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் விக்கிரவாண்டி அருகே பனைமலை என்ற பகுதியில் மலை மீது அமைந்துள்ள, பல்லவர் கால குடவறை கோயிலான தாளகிரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு தரிசனம் செய்த அவர்கள், அருகிலிருந்த சுனையின் கரையோரம் அமர்ந்து, மீனுக்கு உணவு போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கரையில் படிந்திருந்த பாசி வழுக்கி, சுவேதா சுனை நீருக்குள் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக சுனையில் குதித்த சுந்தர்ராஜ் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த ஜெனிபர் அவர்களைக் காப்பாற்றுவதற்காக நீரில் குதித்து முடியாமல் கூச்சலிட்டார். அவரது சப்தம் கேட்டு, அந்த வழியாக வந்த சிலர் சுனை நீரில் இறங்கி ஜெனிபரை காப்பாற்றினர். சுவேதாவும், சுந்தர்ராஜும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக ஜெனிபர் அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரது சடலங்களை போலீஸார் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.