விழுப்புரம் மாவட்டத்தில் புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நமது முன்னோர் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் வீட்டிலுள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்தனர்.
ஆனால், தற்போது இப்பண்டிகையின்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருள்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபடுவதுடன் அதன் மூலம் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டும்.