விக்கிரவாண்டி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் காவல் ஆய்வாளரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை வெட்டுக்காடு என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த மணல் லாரிகளை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, அவை நிறுத்தப்படாமல் காவல் ஆய்வாளர் ஜோதி மீது ஏற்றி கொலை செய்வதுபோல அதி
வேகத்தில் வந்தன.
அதற்குள், ஜோதி சுதாரித்துக் கொண்டு உயிர் தப்பினார். இதையடுத்து, 2 மணல் லாரிகளையும் போலீஸார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
லாரியில் இருந்த கண்டமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் (30), பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ் (24), சின்னகுச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சிவகுரு (24) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், தப்பியோடிய மரகதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ், சாலை அகரத்தைச் சேர்ந்த பாலகுரு ஆகியோரை தேடி வருகின்றனர்.