பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை அனுமதி பெற்ற விளையாட்டுப் போட்டிகளை பகல் நேரத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 14 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 40 காவல் ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள ரௌடிகள், குற்றவாளிகள், குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்ற பிடியாணை நிலுவையில் உள்ளவர்களையும், சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து, கைது செய்ய தனிப் படைகள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை பகல் நேரங்களில் மட்டுமே நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், காவல் துறையினரின் அனுமதி பெற்று, உரிய விளையாட்டுகளை பகல் நேரங்களில் நடத்த வேண்டும். இரவு நேரங்களில் எவ்வித கலை நிகழ்ச்சிகளோ, விளையாட்டுப் போட்டிகளோ நடத்த அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட எஸ்.பி.