தைப்பூச விழாவுக்கு தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை தலைவர் கா.தமிழ்வேங்கை தலைமையில், பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்கள் சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம், வடலூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழாவில் சத்திய ஞான சபையில், அருட்பெரும் ஜோதியாக திகழும் இறைவனை வழிபட, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
நிகழாண்டில் வருகிற 21-ஆம் தேதி தைப்பூச விழா நடைபெறுகிறது. இதே நாளில், பழனி முருகன் கோயில் உள்பட தமிழகத்திலுள்ள பல்வேறு கோயில்களிலும் தேரோட்டம், பக்தர்களின் காவடி ஆட்டம் உள்ளிட்டவை நடைபெறும்.
வடலூர் தைப்பூச விழாவையொட்டி, கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 21-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்கள் வடலூர் தைப்பூச விழாவில் பங்கேற்பர். எனவே, தைப்பூச விழாவுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் தைப்பூச நாளான ஜனவரி 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். மேலும், ஆண்டுதோறும் பொதுவிடுமுறையாக அறிவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை இந்து சமய அறநிலையத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மண்டல ஆணையர், விழுப்புரம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.