உளுந்தூர்பேட்டை வட்டம், பாதூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புக்கட்டையில் சொகுசுப் பேருந்து மோதியதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.
கோயம்புத்தூரிலிருந்து சொகுசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலையில் புதுச்சேரி நோக்கிச் சென்றது. இந்தப் பேருந்து உளுந்தூர்பேட்டையை அடுத்த பாதூர் அருகே சென்றபோது, சாலையிலிருந்த தடுப்புக்கட்டையில் மோதி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த சேலம் மாவட்டம், வீரபாண்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் பாலகுமார் (25), கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலையைச் சேர்ந்த பாலதன்ராஜ் மகன் மதன்ராஜ் (41) உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
பின்னர், அவர்கள் மீட்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.