தைத் திருநாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரு தினங்களாக போலீஸார் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடினர்.
வழக்கமான பாதுகாப்புப் பணி காரணமாக, பெரும்பாலான போலீஸார் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத சூழல் இருப்பதால், அனைத்து காவல் நிலையங்களிலும், காவலர்கள் தைப்பொங்கல் விழா கொண்டாடி மகிழ வேண்டும் என்று, மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, தைத் திங்கள் தொடங்கி இரு தினங்களாக, மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில், போலீஸார் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
துணை காவல் கண்காணிப்பாளர் ஜெ.சங்கர், ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், சதீஷ், ராஜாராம் மற்றும் தலைமைக் காவலர்கள், காவலர்கள் அனைவரும் திரண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு வழிபட்டனர்.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலைக் கொண்டாடினர்.
காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர்கள் மருது மற்றும் தலைமைக் காவலர்கள், காவலர்கள் கலந்துகொண்டனர்.
உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் சாகுல் அமீது தலைமையில் சமத்துவ பொங்கலை கொண்டாடினர். உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், ஆதி, காந்தி, தனிப் பிரிவு உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் தலைமைக் காவலர்கள், காவலர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், இரு தினங்களாக பொங்கல் வைத்து பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆண்டு தோறும் பொங்கல் விழாக்களின் போது, விடுமுறையின்றி தவித்து வரும் காவலர்களுக்கு, புத்தாடையுடன் காவல் நிலையங்களிலேயே பொங்கல் விழா கொண்டாடியது பெரிதும் மகிழ்ச்சியை தந்தது.