விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, 1,044 மதுப் புட்டிகள் மற்றும் 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக மதுப் புட்டிகள் கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், கோட்டக்குப்பம் அருகேயுள்ள செட்டிநகர் என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக சென்னை நோக்கி வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 1,044 புதுவை மாநில மதுப் புட்டிகள் மற்றும் 50 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.ஒரு லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காரில் இருந்தவரை விசாரித்தனர். விசாரணையில் அவர், கோட்டக்குப்பம், ரஹமத் நகரைச் சேர்ந்த அப்துல்லா மகன் ரஹீம் (33) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகளை சென்னைக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக அவரை போலீஸார் கைது செய்து, மதுப் புட்டிகள், சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.