திண்டிவனம் அருகே நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலய கட்டடத்தை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் அருகே உள்ள கம்பூர் கிராமத்தில் 1997-ஆம் ஆண்டு கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் கம்பூர், நந்தம்பாக்கம், பனையூர், பாங்கொளத்தூர், ஏப்பாக்கம், நொளம்பூர், கோனேரிக்குப்பம், தொழுப்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த தேவாலயம் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக, சாரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், 2012-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். விசாரணையின் முடிவில், தேவாலயத்தை அகற்ற உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, அந்த தேவாலயத்தை இடிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, திண்டிவனம் வட்டாட்சியர் பிரபு வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள் தேவாலய ஆக்கிரமிப்பை அகற்றும் பணியைத் தொடங்கினர். திண்டிவனம் டிஎஸ்பி திருமால் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேவாலயத்தை இடிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதனிடையே, ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, மாட்டுக் கொட்டகையை அதிகாரிகள் அகற்றினர். உதவி ஆட்சியரிடம் முறையிட்டு 7 நாள்கள் அவகாசம் கோரியதையடுத்து, தேவாலயத்தை இடிக்கும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.