விழுப்புரம் அருகே திங்கள்கிழமை அதிகாலை அடகுக் கடைக்காரர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூரை அடுத்த கணக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(50). இவர், அருகேயுள்ள வாணியம்பாளையத்தில் நகை அடகுக் கடை வைத்துள்ளார். இவர் விழுப்புரத்தில் வசிக்கும் நிலையில், இவரது தாய் கஸ்தூரி (80) மட்டும் வாணியம்பாளையத்தில் தனியாக இருந்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கஸ்தூரி வீட்டில் படுத்துத் தூங்கினார். திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த சுமார் 2 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் வளவனூர் காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.