உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதியதில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே ஷேக் உசேன் பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத் தக்க நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த காவல் ஆய்வாளர் உதயக்குமார் மற்றும் எடைக்கல் போலீஸார் சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கார் ஓட்டி வந்த சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி மீது வழக்குப் பதிந்து, உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.