கோடை வெயின் தாக்கம் குறையாத நிலையில், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரிப்பால் விழுப்புரத்தில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விழுப்புரத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, பகல் நேரத்தில் வெயில் தாக்கத்தால் மக்கள் பெரும் சிரமமடைகின்றனர்.
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, நீர் மோர், பழச்சாறு, இளநீர் மட்டுமல்லாது எலுமிச்சை பழச்சாறையும் அதிகமாகப் பருகின்றனர். இதனால், தேவை காரணமாக, எலுமிச்சை பழங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் திங்கள்கிழமை ஒரு எலுமிச்சை பழம் ரூ.6 வரை விற்பனை செய்யப்பட்டது. அளவுக்கு தகுந்தாற்போல விலையும் இருந்தது.
இது குறித்து எலுமிச்சை பழம் வியாபாரி கண்ணன் கூறியதாவது: வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் எலுமிச்சை சாகுபடி குறைந்துள்ளது. அந்த பழங்களும் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு திருச்சிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நேரடியாக, விழுப்புரம் மார்க்கெட்டுக்கு கிடைப்பதில்லை. திருச்சி விலையைப் பொருத்து இங்கு எலுமிச்சைப் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்படும் எலுமிச்சை பழங்களும் சென்னைக்கு சென்று, அதன் பிறகே விழுப்புரத்துக்கு வருகின்றன. இதுவே விழுப்புரத்தில் எலுமிச்சை பழத்தின் விலை உயர காரணம். மழை தொடர்ந்து இரு நாள்கள் பெய்தால் எலுமிச்சைப் பழங்களின் விலை குறைந்துவிடும் என்றார்.