உலகாபுரத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க மீண்டும் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வானூர் அருகேயுள்ள உலகாபுரத்தைச் சேர்ந்த ஏ.சுந்தர் தலைமையில் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது: உலகாபுரத்தில் குடிநீர் பிரச்னை தொடர்கிறது. 29 இடங்களில் குடிநீர் கைப்பம்புகள் உள்ள நிலையில் 3 மட்டுமே இயங்குகின்றன.
மின்விசையுடன் கூடிய 6 சிறிய குடிநீர் தேக்கத் தொட்டிகளில் 4 மட்டுமே செயல்படுகின்றன. மீதமுள்ளவற்றில் தண்ணீர் வருவதில்லை. புதிதாக கட்டப்பட்ட நூலகம் திறக்கப்படவில்லை. மயானப் பகுதி சாலைக்கு மின்விளக்கு வசதி இல்லை.
இது போன்ற பல கோரிக்கைகளை தீர்க்க வேண்டுமென்று, ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை வைக்க முயன்றபோது, அவர்கள் கேட்கவில்லை. பொது மக்களுக்குத் தெரியாமல், கூட்டத்தை பெயரளவில் நடத்திமுடித்துவிட்டனர். இதனால், இந்த கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்து, நடவடிக்கை எடுக்க, மீண்டும் உலகாபுரத்தில் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றனர்.