கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேர் இந்திரா நகரில் வசிப்பவர் பெரியசாமி (67). ஞாயிற்றுக்கிழமை மாலை கள்ளக்குறிச்சியில், கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அவரது தங்கையை பார்த்துவிட்டு சைக்கிளை சாலையோரமாக தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அரசு மாணவியர் விடுதி அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பெரியசாமி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர் பெரியசாமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எடுத்தவாய்நத்தம் ஆண்டிராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.