விலையில்லா மடிக்கணினி: மாணவர்கள் போராட்டம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் திங்கள் கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
 விழுப்புரத்தைச் சேர்ந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஒருங்கிணைப்பில், கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அரசுப் பள்ளியில் கடந்த 2017-18ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்து முடித்து, தற்போது கல்லூரிகளில் படித்து வரும் 218 மாணவ, மாணவிகளுக்கு அரசின் மடிக்
 கணினி வழங்கப்படவில்லை.
 தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினி வழங்க கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.
 மடிக்கணினி வழங்குவதால் மாணவர்கள் கல்வி சார்ந்த தகவல்களைப் பெற்று முன்னேறுவர். இதனை கருத்தில்கொண்டு, பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களுக்கும், அரசு விலையில்லாத மடிக்கணினியை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். அவர்களை உதவி ஆய்வாளர்கள் சதீஷ், விவேகானந்தன் தலைமையிலான விழுப்புரம் தாலுகா போலீஸார் ஆட்சியர் அலுவலக வாயில் பகுதியிலேயே தடுத்து நிறுத்தி மனு அளிக்குமாறு தெரிவித்து அனுப்பினர். இதையடுத்து, மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டுச் சென்றனர்.
 கூகையூரில்... விலையில்லா மடிக் கணினி வழங்கப்படாததைக் கண்டித்து, சின்னசேலம் அருகே கூகையூரில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் பள்ளியில் 2017-2018, 2018-2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கவில்லையாம். இதைக் கண்டித்து, கூகையூர் பேருந்து நிறுத்தத்தில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கீழ்க்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று மாணவர்களை சமாதானப்படுத்தினர்.
 மாணவர்களின் போராட்டம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமியிடம் செல்லிடப்பேசி மூலம் தெரிவித்துள்ளார். ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாக மாணவர்களிடம் தெரிவித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால், சின்னசேலம்-பெரம்பலூர் சாலையில் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com