கட்டுமானத்துக்கு தேவையான கம்பி, சிமென்ட், மணல் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்ட சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியூ) 9-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்
ஏ.சகாதேவன் சிஐடியூ தொழிற் சங்க கொடி ஏற்றி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் பி.அருள்ஜோதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வி.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ஆர்.டி.முருகன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலர் ஏ.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார் (படம்). மாவட்டச் செயலர் எஸ்.முத்துக்குமரன் வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினார்.
மாவட்டப் பொருளர் கே.அம்பிகாபதி வரவு செலவு அறிக்கை வெளியிட்டுப் பேசினார். நிர்வாகிகள் ஆர்.மூர்த்தி, எம்.புருஷோத்தமன்,
டி.ராமதாஸ், கே.அய்யப்பன், ஏ.மெஹராஜ்பேகம், வி.நிஜா ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் உடனடியாக நல உதவிகளை வழங்க வேண்டும். ஒன்றியம் வாரியாக மணல் குவாரிகளை அமைத்து, மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கவேண்டும்.
நலவாரியத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம் உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும், கட்டுமானத்துக்கு அவசியமான கம்பி, சிமென்ட், மணல் உள்ளிட்ட பொருள்களின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை பொதுச்செயலர் கே.திருச்செல்வம் நிறைவுரையாற்றினார். திட்டச் செயலர் ஆர்.சேகர் நன்றி கூறினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக, எஸ்.முத்துக்குமரன் சிஐடியூ மாவட்டத் தலைவராகவும், ஆர்.மூர்த்தி மாவட்டச் செயலராகவும்,வி.பாலகிருஷ்ணன் மாவட்டப் பொருளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.