கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரிக்குச் சென்று வரக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூர் எல்லையில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் காலை, மாலை என இரு வேளைகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
கள்ளக்குறிச்சியில் இருந்து இந்தக் கல்லூரி சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்லூரிக்குச் சென்று வர தனியாக பேருந்து கிடையாது.
சிறுவங்கூர், அகரகோட்டாலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில்தான் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டும்.
இந்தப் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், கூட்டம் நிரம்பி வழியும் நிலை உள்ளது.
இதனால், மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே, கல்லூரிக்குச் சென்றுவர ஏதுவாக காலை, மாலை வேளைகளில் கூடுதலாகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.