விழுப்புரத்தில் சாலையோரம் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விழுப்புரம் - விராட்டிக்குப்பம் சாலையில், குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, அங்குள்ள தனியார் எரிவாயு உருளை நிறுவன அலுவலகம் அருகே சாலையோரம் ஒரு பையில் பச்சிளம் ஆண்
குழந்தை அழுதபடி கிடந்தது தெரியவந்தது.
அடையாளம் தெரியாத மர்ம நபர் அந்தக் குழந்தையை சாலையோரம் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கனகேசன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.
மேலும், அந்தப் பகுதியினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அந்தக் குழந்தையை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆண் குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.