செஞ்சி அருகே திருமண விருந்தில் தகராறு செய்தவரை கஞ்சனூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
விக்கிரவாண்டி வட்டம், நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் காமராஜ் (38). இவரது தங்கைக்கு வியாழக்கிழமை திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. அப்போது, காமராஜ் மற்றும்
அவரது உறவினர் நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணபிரான் ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
முட்டத்தூர் காலனியைச் சேர்ந்த அன்பழகன் மகன் புஷ் (எ) புஷ்பராஜ் (17) உணவு பரிமாறிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, கண்ணபிரான் பிரியாணி கேட்டாராம். அதற்கு எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களுக்கு வைத்துவிட்டுத்தான் உனக்கு வைப்பேன் என புஷ்பராஜ் கூறினாராம். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே
தகராறு ஏற்பட்டு, கண்ணபிரானை அவதூறாகப் பேசி, தடியால் புஷ்பராஜ் தாக்கினாராம்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த கண்ணபிரான் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில், கஞ்சனூர் போலீஸார் புஷ்பராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர்.