திண்டிவனம் அருகே விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திண்டிவனம் வட்டம், சித்தணி அருகே உள்ள ஏழாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியப்பன். அந்தக் கிராமத்திலுள்ள இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.
இந்த கிணற்றுக்குள் சனிக்கிழமை அந்தப் பகுதியில் தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று விழுந்து, தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தது. இதையறிந்த கிராம மக்கள், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், நிலைய அலுவலர் சந்தானகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த மானை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்த மான் விழுப்புரம் வன அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினர் அந்த மானை வேட்டவலம் காப்புக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.