ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விழுப்புரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை ஹைட்ரோ கார்பன் திட்ட கிணறுகள் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கடலூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சட்டப் பேரவையில் தனியாக சட்டம் இயற்றி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விழுப்புரத்தில் தலைமை தபால் நிலையம் முன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விஜய், முன்னாள் மாவட்டச் செயலர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
நிர்வாகிகள் சவுரிராஜன், ராமசாமி, கலியமூர்த்தி, கலியபெருமாள், அப்பாவு, ரஞ்சித், வெற்றிவேல், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அவர்கள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகளை தலைமை தபால் நிலையத்தின் தபால் பெட்டியில் செலுத்தினர்.
இதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
நடைபெற்றது.