விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அதிமுக நகரச் செயலரின் கார், அவரது உறவினரின் ஆட்டோ ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு தீ வைத்த இரு நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(50). கோட்டக்குப்பம் அதிமுக நகரச் செயலராக உள்ளார். இவரது தம்பி அசோகன் (43). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷுக்கும் (35) திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அசோகன், தனது உறவினரான பாலாவுடன் (30) சேர்ந்து சதீஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நள்ளிரவு பாலா வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோவுக்கும், கணேசன் வீட்டில் இருந்த சொகுசு காருக்கும் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியதாகத் தெரிகிறது. இதையறிந்த பாலா, கணேசன் ஆகிய இருவரும் வீடுகளிலிருந்து வெளியே வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயைக் கட்டுப்படுத்தினர். எனினும், கார் முழுவதுமாகவும் ஆட்டோவின் பின்பக்க பகுதியும் சேதமடைந்தன.
கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், தடய அறிவியல் துறையினர் வந்து தடயங்களைச் சேகரித்தனர்.
விசாரணையில், தகராறு காரணமாக சதீஷ், தனது நண்பர் ஆனந்துடன் சேர்ந்து, வாகனங்களை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷ், ஆனந்த் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.