கண்டமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கண்டமங்கலம் அருகே காந்தி நகரைச் சேர்ந்த ஜாபர் சேட்
மகன் மன்சூர் அலி (35). இவருக்கும், புதுவை மாநிலம், மடுகரையைச் சேர்ந்த சர்புதீன் மகள் ரேஷ்மா(28) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரேஷ்மா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவரை பிரசவத்துக்கு அழைத்துச் செல்ல, அவரது தந்தை, தனது உறவினர்களுடன் செவ்வாய்க்கிழமை மன்சூர் அலி வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது, ரேஷ்மாவை அழைத்துச் செல்ல மன்சூர் அலியும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, மன்சூர் அலி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கு யாரோ தீ வைத்ததாகத் தெரிகிறது. குடும்பத் தகராறால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு காரணமா என கண்டமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.