விழுப்புரம் மாவட்டத்தில் சூரிய ஒளி உலர்கலங்கள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 2018-19-ஆம் ஆண்டுக்கான விரிவான பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 200 சூரிய ஒளியில் இயங்கும் உலர் கலங்கள், 10 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் பழங்குடியின விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், பழங்குடியினர் நடத்தி வரும் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மண்புழு உரம், காகிதம், துணிப்பை ஆகியவை தயாரித்து விற்பனை செய்யவும் ஆர்வமுள்ள குழுக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் புகைப்படம், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விவசாய நிலத்துக்கான பட்டா அல்லது அடங்கல் ஆகியவற்றின் நகல், தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி-606202 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.