விழுப்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தகுதிவாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பலர் அரசுப் பணிகளில் தேர்வாகியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள குரூப் 4 தேர்வுக்கு வரும் 19-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோர் வரும் 18-ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி, பதிவு செய்துகொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.