விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறையின் கீழ், 2 பழங்குடியினர் மாணவர் விடுதியும், ஒரு பழங்குடியினர் தொழில் பயிற்சி மாணவர் விடுதியும் என மொத்தம்
3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் தங்கி, கல்வி பயிலும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், 4 இணைச் சீருடைகள், 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும்.
இந்த விடுதிகளில் சேருவதற்கு மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்று ஜூன்15-ஆம் தேதிக்குள்ளும், தொழில் பயிற்சி மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஜூலை
10-ஆம் தேதிக்குள்ளும், பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி, கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.