விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வியாழக்கிழமை, பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மகன் ராஜவர்மன்(20), அன்பழகன் மகன் சூர்யா (எ) கோகுலதேவன் (23). நண்பர்களான இவர்கள், வியாழக்கிழமை புதுச்சேரிக்கு வந்து மதுப் புட்டிகளை வாங்கிக்கொண்டு, மாலை 6 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் சூணாம்பேடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். ராஜவர்மன் இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்காணம் அருகே கீழ்ப்பேட்டை என்ற இடத்தில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை அவர்கள் முந்திச் செல்ல முயன்றனர். அப்போது, எதிரே வந்த பேருந்தின் பக்கவாட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில், ராஜவர்மன், கோகுலதேவன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்த மரக்காணம் காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் மற்றும் போலீஸார் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் நள்ளிரவில் உயிரிழந்தனர்.