விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.21 லட்சம் கையாடல் செய்தது தொடர்பாக, 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
மரக்காணம் அருகே கந்தாட்டு கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சங்கத்தின் கட்டுப்பாட்டில், 6 நியாய விலைக் கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளில் அத்தியாவசிய பொருள்களின் விற்பனைத் தொகையை விற்பனையாளர்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, திண்டிவனம் சரக கூட்டுறவு துணைப் பதிவாளர் பால்ராஜ், கந்தாடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்துக்குச் சென்று திடீர் தணிக்கை மேற்கொண்டார். அதில், கடந்த 1.4.2014 முதல் 31.3.2016 வரை நியாய விலைக் கடை விற்பனையாளர்கள், கடைகளின் விற்பனைத் தொகையை சங்கத்திற்குச் செலுத்தாமல் ரூ.21 லட்சத்து 64 ஆயிரத்து 801 கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இந்த முறைகேட்டில் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் புதுப்பாக்கம் ராஜேந்திரன்(54), கந்தாடு முத்துக்குமார்(50), ஆறுமுகம், குரும்பரம் சீனிவாசன்(49), கே.என்.பாளையம் ராஜா (50), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மரக்காணத்தைச் சேர்ந்த பரசுராமன், சங்கத்தின் முன்னாள் செயலர் கந்தாடு பாஸ்கரன், சங்கத்தின் எழுத்தர்கள் கந்தாடு ஸ்ரீதரன், தாணிமேடு சந்தானம், கே.என்.பாளையம் தியாகராஜன், அலுவலக உதவியாளர் கந்தாட்டை சேர்ந்த எத்திராஜ் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
இது குறித்து துணைப் பதிவாளர் பால்ராஜ், விழுப்புரம் வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், ராஜேந்திரன் உள்பட 11 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ரேஷன் கடை விற்பனையாளர்கள் ராஜேந்திரன், முத்துக்குமார், சீனிவாசன், ராஜா ஆகிய 4 பேரையும் திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.