கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரியை விழுப்புரம் மாவட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம், கணபதி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ஸ்ரீதர் (40). லாட்டரி சீட்டு விற்பனையாளரான இவர் தற்போது, புதுச்சேரியில் வசித்து வருகிறார். கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை நியமித்து, அரசால் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்தார்.
இது தொடர்பாக, விழுப்புரம் தாலுகா, கண்டமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இருப்பினும் தலைமறைவாக இருந்து கொண்டு, லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது, விழுப்புரம் காட்பாடி ரயில்வே கடவுப்பாதை பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஸ்ரீதரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளாக லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவரை மேற்கு போலீஸார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு வியாபாரியை கைது செய்த மேற்கு காவல் ஆய்வாளர் வீரமணியை, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.